தாம்பரம் ரயில் நிலையத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ஆர்.பி.எப் காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்கள் ஒன்றுகூடி தாம்பரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபாதை வழியாக சென்ற இளம்பெண் ஒருவர் நடந்து சென்றபோது அங்கு மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், அச்சம் அடைந்த அந்த இளம்பெண் அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.
பிறகு பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த நபர் ஆர்பிஎப் உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் பொதுமக்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த மற்றொருவரை தாக்கினார்.
இதன் காரணமாக அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி அவரை பிடித்து வைத்துக்கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தாம்பரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் ஆர்.பி.எப் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தான் குடித்துவிட்டு தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதனிடையே அங்கு வந்த ஆர்.பி.எப் காவல்துறையினர் சீனிவாசனுக்கு ஆதரவாக பேசத் தொடங்கினர்.
இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரை அடிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர், தாம்பரம் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததால், நாளை விசாரணைக்கு வர வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வசூலில் ‘பத்து தல’ சாதித்ததா? – வெளிவந்த தகவல்..