திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மினி வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே இருக்கும் ஜானகிராம் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் மினி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது மோதியது.
இதையடுத்து மினி வேன் பின்னால் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, மினி வேன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இரண்டு கனரக வாகனங்களுக்கு இடையே சிக்கிய மினி வேன் அப்படியே நொறுங்கிப் போனது. அந்த மினி வேனில் பயணித்த 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அம்பேத்கர் காவி உடை, விபூதி, குங்குமம் வைத்த போஸ்டர்- இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது