சென்னையில் இயங்குவதை போன்றே மெட்ரோ ரயில் திட்டம் மதுரை மாநகரிலும் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் விதமாக நாட்டில் சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற முக்கிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது MRTS என அழைக்கப்படும் பறக்கும் ரயில் திட்டத்தை மதுரையில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கி இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்ட அறிக்கையை தயார் செய்ய ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் இறுதியில் தாக்கல் செய்யப்பட இருக்கும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவற்காக வருகிற நிதிநிலை அறிக்கையில் 8 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் 11-ஆவது நாளாக பால் தட்டுப்பாடு; இன்னலில் பொதுமக்கள்