சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் நடிகர் போண்டா மணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திரையுலகை பொறுத்தவரையில் உச்சத்தில் இருக்கும்போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக பல நடிகர், நடிகைகளின் வாழ்வு இருந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்பார்வைக்கு பிரமாண்டமாக தெரிந்தாலும், திரையுலகில் மட்டும் அல்ல மற்ற தொழில் துறைகளிலும் இது போல் பிரச்சனைகள் எப்போதும் இருக்கவே செய்கின்றன.
அப்படி தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் போண்டாமணி. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக வடிவேலு, விவேக் போன்றவர்களின் நகைச்சுவை பட்டாளத்தில் போண்டாமணிக்கு பிரத்யேக இடமுண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக போண்டாமணிக்கு படவாய்ப்புகள் வருவது மிகவும் குறைந்துவிட்டன.
இந்நிலையில், தற்போது நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விவரத்தை முதலில் போண்டாமணியின் சக நடிகரும், வடிவேலு, விவேக் போன்றவர்களின் நகைச்சுவை பட்டாளத்தில் உள்ள மற்றொருவருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க ஒரு காணொளியின் வாயிலாக தெரிவித்தார். மேலும், உயிருக்கு போராடும் அவருக்கு நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கானமுழு செலவையும்முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது pic.twitter.com/O6M8IPkvQD
— Subramanian.Ma (@Subramanian_ma) September 22, 2022
இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் போண்டா மணியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கான முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.