திருவண்ணாமலையில் 3 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டி மாந்திரீக பூஜை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தசராபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி (வயது 55). இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாஜி ஆகிய 2 மகன்களும், கோமதி என்ற மகளும் இருக்கின்றனர்.
கோமதியின் கணவர் அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ். இதில் பூபாலன் சென்னை, தாம்பரம் ஆயுதப்படை காவல்துறையில் வேலை செய்து வருகிறார். இவர்கள் 6 பேரும் கடந்த 3 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீக செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை முதல் கதவை திறக்காமல் மந்திரம் மட்டும் சொல்லிக்கொண்டு இருப்பதாக, அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வருவாய்த்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தாசில்தார் ஆர்.ஜெகதீசன், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வரும்படி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மாணவர்களின் வழிகாட்டி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள்-குடும்பத்தினர் மரியாதை
அதற்கு அவர்கள் “நாங்கள் பூஜை செய்கிறோம். எங்கள் பூஜையை தடை செய்ய வேண்டாம். நீங்கள் வெளியே செல்லுங்கள்” என குரல் கொடுத்தனர். சுமார் 5 மணி நேரம் போராடி அவர்களை வெளியே வரும்படி அழைத்தும், அவர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த 6 பேரையும் தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் சேர்ந்து மீட்டனர்.
அப்போது, வெளியே வந்த அவர்கள் 6 பேரும், கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனால், பூஜை மூலம் அவருக்கு பேய் விரட்டி வந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்தப் பூஜையை கோமதியின் கணவர் பிரகாஷ் செய்து வந்தார். மேலும், இந்த பூஜையில் இன்று இரவு அவர்கள் நரபலி கொடுக்க இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் வீட்டில் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த பொம்மை உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து வந்து போட்டு தீயிட்டு கொளுத்தினர்.
மேலும், மீட்கப்பட்ட காவலர் உள்பட 6 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.