அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ அல்லது தனித்தோ போட்டியிட வேண்டும் என விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரி வழங்குவதில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அப்படிப்பட்ட மாவட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை எந்தவித பயன்தரும் அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் வருகிற நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம் முன்னேற நினைக்கும் மாவட்டம் என்பதற்கான பெயரோடு மட்டும் இல்லாமல், உண்மையான வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வலுவான வேட்பாளரை களமிறக்கி இருப்பதாகவும், அதனால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று தெரிவித்தார்.
அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளும் சேர்ந்து காங்கிரஸை எதிர்கொண்டாலும் சரி அல்லது தனித்து களம் கண்டாலும் சரி நிச்சயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி பெறும் என்றும் கூறினார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் வெறும் வாயில் வடை சுடுவதாகவும், அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் கூட்டணியாகவோ, தனித்தோ நின்று போட்டியிடட்டும் என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்தார்.
இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான ஈ.ராமதாஸ் காலமானார்