மராட்டிய சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெருபான்மையை நிரூபித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசேனா ஆட்சியை கவிழ்த்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதற்கடுத்த நாளே ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். அவரைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் நானா படோலே பதவி விலகியதால், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேல் காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஏக்நாத் ஷிண்டே தனது அரசின் பெருமான்மையை நிரூபிக்க ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சபாநாயகர் தேர்தலில், சிவசேனா சார்பில் போட்டியிட்ட ராஜன் சால்வியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ராகுல் நர்வேக்கர் 164 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
இதனிடையே, இன்று (திங்கள்கிழமை) மராட்டிய சட்டமன்றத்தில், ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஏக்நாத் ஷிண்டே 164 வாக்குகள் பெற்று தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இதில், 3 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.