புயல் மற்றும் தொடர் மழையிலும், திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டு 4 நாட்கள் ஆகியும், மகா தீபம் அணையாமல் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளான பரணி தீபம் 6 ஆம் தேதி அதிகாலையும், மகா தீபம் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 மலையின் மீது மாலை 6 மணிக்கும் ஏற்றப்பட்டது.
மகா தீபத்தை காண வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். மேலும் இவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிரிவலம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா தீபம் தொடர்ந்து சுடர்விட்டு எரிந்து, 11 நாட்கள் காட்சி அளிப்பது வழக்கம்.
இந்நிலையில் தீபம் ஏற்றப்பட்டு 4 நாட்கள் ஆகியும் மகா தீபம் சுடர்விட்டு எரிந்துகொண்டு இருக்கிறது. மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலையில் தொடர் மழை பெய்து வருகிற இந்த நிலையிலும் மகா தீபம் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
புரோ கபடி: வெற்றிப்பெற்ற ஹரியானா, பிளே ஆஃப் சென்ற டெல்லி..