மதுரவாயல்-எண்ணூர் துறைமுகம் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணூர் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக ஆட்சி வந்ததும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைந்திருப்பதால், மீண்டும் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது. மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி 20.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டம் 5,800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படக் கூடாது என்றும், பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்பு பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு நிபந்தனை விதித்துள்ளது.
அதேசமயம், கட்டுமானத்தின்போது அகற்றப்படும் கழிவுகளை நீர் நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், அமஞ்சிகரை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை வழியே துறைமுகத்தை சென்றடையும். சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுடன் விரைவில் பணியை தொடங்கி அடுத்த 30 மாதங்களுக்குள் முடிக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது.
காஷ்மீரில் பனிச் சறுக்கு செய்யப் போன இடத்தில் பனிச்சரிவு; இருவர் பலி!