வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதன்காரணமாக, சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மதுரை வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியில், 70 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக, வைகை அணையிலிருந்து சுமார் 3,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், வைகை ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளப்பெருக்கு காரணமாக, வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வைகை ஆற்றின் கரையோரம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்