கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் குடமுழுக்கு விழாவில் கலந்துக்கொள்ள தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர் சோமன். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,
“திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஜூலை 6 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது . இதற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. பொதுவாக கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே நுழைய முடியாது. மேலும், ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தான் பூஜைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க முடியும்.
இந்நிலையில், குடமுழுக்கு விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மாற்று மதத்தை சார்ந்தவர். குடமுழுக்கு விழா அரசு விழாவாக நடைபெறும் போது வழக்கமான சம்பிரதாயங்களை கடைபிடிக்கப்படாமல் கோவிலில் புனிதம் கெடுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆகவே, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் கோவில் வளாகத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,
“இந்துக்கள் அல்லாதோர் இந்து கோவில்களில் நுழைய வேண்டாம் என கோவில்களின் முன்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்துசமய அறநிலையத் துறை விதிகளில் கூறப்படவில்லை. 120 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில், இறை நம்பிக்கை கொண்ட மக்கள் கோவிலுக்கு செல்லும்போது, அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பிரபல பாடகர் யேசுதாஸ் வேறு மதத்தைச் சேர்ந்தவர் தான். இருந்தாலும் அவர் ஏராளமான இந்து கடவுள் பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோவில்களில் ஒலிக்கின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திலும் நாகூர் தர்காவிலும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய கண்ணோட்டத்தில் அணுக விரும்பவில்லை. பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். ஆகையால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.”
இவ்வாறாக நீதிபதிகள் கூறினர்.