பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் காரணமாக லக்னோ ஆடுகள வடிவமைப்பாளர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மூன்று போட்டிகள் இருபது ஓவர் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிப் பெற்றது. இதில் இரண்டாவது போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது சிக்சர்களே அடிக்கப்படவில்லை. மேலும், முழுக்க முழுக்க சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறே இந்த மைதானம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இருபது ஓவர் போட்டிக்கு ஏற்றவாறு மைதானத்தை வடிவமைக்காத காரணத்துக்காக லக்னோ மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
‘கே.ஜி.எஃப் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன்’ – வெளிவந்த அதிரடி அறிவிப்பு!