பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கைவிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மின் வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகையில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கென்று இணையதளத்தில் பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மின் கட்டணம் செலுத்த வரும்போது, ஆதார் எண்ணை இணைக்க மின் பயனீட்டாளர்கள் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், அதேநேரம் இதைக்கென்று காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்பதால், பொதுமக்கள் இதுகுறித்து பதற்றமோ அச்சமோ அடைய வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளனர்.
முற்றிலுமாக தரவுகளை சேமிக்கும் அடிப்படையிலேயே ஆதார் எண் கேட்கப்பட்டுள்ளதாகவும், ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே ஆதார் எண்ணை வைத்து வெவ்வேறு மின் இணைப்புகளை இணைக்கலாம். இறந்தவர்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால், பெயர் மாற்றம் செய்து, பிறகு சம்பந்தப்பட்ட நபர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மானியங்கள் ரத்து செய்யப்படும் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை என மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.