தனியார் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையார் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் உள்பட மூன்று பேருக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோம்பை -புதூர் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி தனியார் தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடு மேய்த்து வந்த அலெக்ஸ்பாண்டியன் மீது வனத் துறையினர் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர். இதே விவகாரத்தில் கடந்த அக். 2-ம் தேதி தனியார் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளரும், தேனி மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனி மாவட்ட வன அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலர் சமர்ந்தாவிடம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலர் தங்க.தமிழ்செல்வன் மனு அளித்தார்.
இதையும் படிங்க: இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு; மீனவரை சுட்ட விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மாவட்ட வன அலுவலர் சமர்ந்தா கூறியதாவது:
சிறுத்தை உயிரிழந்து கிடந்த தோட்டத்தின் உரிமையாளர் விவரம் குறித்து வருவாய்த் துறை அலுவலர்களிடம் அறிக்கை கேட்டிருந்தோம். அப்போது, அந்நிலம் தேனி மக்களவை உறுப்பினர் ப. ரவீந்திரநாத் உள்ளிட்ட 3 பேரின் பெயர்களில் கூட்டுப் பட்டாவாக உள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
நில உரிமையாளர்களில் மக்களவை உறுப்பினரின் பெயரும் உள்ளதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இதுகுறித்து வனத் துறை சார்பில் மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நிலத்துக்கு உரிமையாளர்கள் என்று கூறப்படும் எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் ஜெயம் ரவிக்கு உறுதியான கொரோனா தொற்று…