கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் சிலர் காணொளி வெளியிட்டு புகார்களை தெரிவித்திருந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து புகாரை எடுத்தது. இதையடுத்து கலாஷேத்ரா பாலியல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தப் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை. இந்த விவகாரம் எனது கவனத்திற்கு வந்தவுடன், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு விவரங்களை அறிந்தேன்.
இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர், மற்றும் அலுவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இன்று காலையிலும் வருவாய் அலுவலர், அதிகாரிகள் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி வருகிறார்கள்.
மேலும், மாணவிகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் இளையராஜா..