கள்ளக்காதல் விவகாரத்தில் அழகு கலை நிபுணர் குத்திக்கொலை செய்யப்பட்டு 12 துண்டுகளாய் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்தவர், பிரபு இவருக்கு வயது 39. இவர் கோவை காந்திபுரத்தில் அழகு கலை நிபுணராக பணியாற்றிவந்தார். பிரபு சரவணம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும், இவர் முதல் மனைவியை பிரிந்து 2வது திருமணம் செய்தவர். 2-வது மனைவி ஈரோட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
ஒருவார காலமாக பிரபு வீடு திரும்பவில்லை. கடந்த 13-ம் தேதியில் இருந்து அவரது மொபைல் ஃபோன் ஸ்விட்ச் ஆஃபில் உள்ளது. இது தொடர்பாக 2வது மனைவி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து பிரபுவை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியில் ஆணின் முழங்கை வரை வெட்டி துண்டிக்கப்பட்டு கிடந்தது. அதனை துடியலூர் போலீசார் கைப்பற்றி அந்த கை யாருடையது? என விசாரித்தனர்.
அப்போது கையில் இருந்த அடையாளம் மற்றும் விரல் ரேகை பதிவை வைத்து காவல்துறை அது பிரபுவின் கை என்ற முடிவுக்கு வந்தனர். பிரபு வசித்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவை பார்த்தபோது அவர் பைக்கில் வீட்டுக்கு வந்து பின்னர் வெளியே சென்றது பதிவாகி இருந்தது.
இதுபற்றி தனிப்படை காவல்துறை தீவிரமாக விசாரித்தனர். அப்போது கள்ளக்காதல் தகராறில் பிரபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையில் தொடர்புடைய கோவையை சேர்ந்த கவிதா (37) மற்றும் அமுல் திவாகர் (34), கார்த்திக் (28) ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கவிதாவின் வீட்டில் பிரபு வாடகைக்கு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் அமுல் திவாகருடனும் கவிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பிரபுவை கவிதா கண்டுகொள்ளவில்லை. இதனால் கவிதாவுக்கு பிரபு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார். இந்த டார்ச்சரால், கவிதா, அமுல் திவாகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு குத்திக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை 12 துண்டுகளாக தனித்தனியாக வெட்டி கூறுபோட்டு பல்வேறு பகுதிகளில் உடலின் துண்டுகளை வீசியுள்ளனர்.
இந்நிலையில், அமுல் திவாகரின் செல்போன் எண்ணும், இறந்த பிரபுவின் செல்போனும் காந்திமாநகரில் ஒரே இடத்தில் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதை வைத்தே போலீசார் குற்றவாளிகளை நெருங்கினர். குற்றவாளிகளிடம் அரிவாள், கத்தி, பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.