கனடாவின் ஒன்டோரியோ நகரில் இருந்த காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப்பை பிரித்து இரு பகுதியையும் இணைத்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டுமென்று நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட ஒன்றாகும்.
இருப்பினும், ஆஸ்திரேலியா, கனடா போன்ற அயல்நாடுகளில் காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக இந்து கோயில்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கனடாவின் ஒன்டோரியோ நகரில் இருந்த காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர். வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சிலையின் மீது பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளனர்.
மேலும், இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்து வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் காலிஸ்தான் அமைப்பினர் எழுதியுள்ளனர். குறிப்பாக, காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்டோரியோவில் உள்ள ஹாமில்டன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிதையுண்ட இந்த சிலையானது இந்திய அரசு, கனடா அரசுக்கு நன்கொடையாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கிறார் பாம்பே ஜெயஶ்ரீ – அவரது குடும்பம் சொன்ன தகவல்..