கேரளாவில் முன்பற்கள் வெளியே தள்ளிய நிலையில் உள்ளதால் பழுங்குடியின இளைஞர் ஒருவரை கேரள அரசின் பப்ளிக் கமிஷன் அரசு வேலையிலிருந்து நிராகரித்துள்ளது.
கேரள அரசின் பப்ளிக் கமிஷன் (பி.எஸ்.சி), ஃபிட் ஃபாரஸ்ட் ஆஃபிசர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து, கேரளாவில் அரசு வேலைக்கு முயன்ற பலரும் விண்ணப்பித்து, செப்டம்பர் மாதம் எழுத்து தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களில் ஒருவர்தான், முத்து. இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள முக்காலி பகுதியில் இருந்து வனத்துக்குள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆனவாயி கிராமத்தைச் சேர்ந்த பழுங்குடியினர்களில் ஒருவர் இவர்.
எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்ற முத்து, இம்மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற உடற்தகுதி தேர்விலும் வெற்றிப் பெற்றார். இதனால், அரசு பணி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் முத்து இருந்துள்ளார்.
ஆனால், மருத்துவ தகுதி சான்றிதழில் முன்பக்க பல் தள்ளியிருப்பதாக டாக்டர் குறிப்பிட்டதை தெரிவித்து அரசு பணி வழங்க இயலாது என பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
மேலும், பல் தள்ளியிருந்தால் பழங்குடியின இளைஞருக்கு அரசு வேலை வழங்காத விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த சர்ச்சையை அடுத்து, எஸ்.சி, எஸ்.டி ஆணையம் வழக்கு பதிவு செய்தது. வனம் மற்றும் வன விலங்குகள் துறை முதன்மை செயலாளர், பி.எஸ்.சி செயலர் உள்ளிட்டோர் இது சம்பந்தமாக ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பி.எஸ்.சி இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
யூனிஃபார்ம் சர்வீஸ் விதிப்படி தேர்வாகும் நபரின் ஒவ்வொரு கண்ணுக்கும் முழு பார்வை சக்தி இருக்க வேண்டும். கால் முட்டிகள் ஒன்றை ஒன்று இடித்த படி இருக்கக்கூடாது. கால் நரம்புகள் வெளியே தெரியக்கூடாது. கால்கள் வளைந்த நிலையில் இருக்கக்கூடாது. பல் தள்ளியிருப்பது, திக்கித்திக்கி பேசுவது, கேட்கும் திறன் குறைவு உள்ளிட்டவை இருந்தால் வேலைக்கு சேர தகுதி இல்லாதவர் என ஏற்கனவே விதிமுறை உள்ளது. அந்த விதிமுறைப்படியே அந்த இளைஞருக்கு வேலை வழங்க இயலவில்லை.
என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து முத்து தெரிவிக்கையில், ‘சான்றிதழ் சரிபார்த்த சமயத்தில் எனது முன் பற்கள் தள்ளிய நிலையில் இருப்பதால் வேலை வழங்காமல் வெளியேற்றினர். வெளியே தள்ளிய நிலையில் உள்ள பற்களை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.’ என்று தெரிவித்தார்.
மேலும், பணம் இல்லாததால் என் முன்பற்களை இதுவரை சரிசெய்யாமல் இருந்தேன். எனக்கு அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்தேன். இறுதிகட்டத்தில் எனது தள்ளிய பல்லை காரணம்காட்டி வேலை மறுத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது’ என்றும் முத்து தெரிவித்துள்ளார்.
‘அரசியலில் போலியானவர் ஓ.பன்னீர்செல்வம்’ – விளாசிய நத்தம் விஸ்வநாதன்…