புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் முக்கியமானவர், பீலே. இவருக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பில் இருந்ததால் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார் பீலே.
இதனால், பீலேவின் உடல்நிலை பலவீனமடைந்தது. மேலும், அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், பீலே சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனிடையே, பீலேவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் அவரது நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகம் மற்றும் இருதய செயல்பாடுகள் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பீலேவின் மகள் கெல்லி நாஸிமென்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பீலேவுடன் இருந்ததாக தெரிவித்திருந்தார். அத்துடன், பீலேவின் மகன் தந்தையின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தந்தையே நீங்கள் தான் எனது வலிமை என்று பதிவிட்டிருந்தார்.
‘அரசியலில் போலியானவர் ஓ.பன்னீர்செல்வம்’ – விளாசிய நத்தம் விஸ்வநாதன்…