இந்த உலகில் தொடர்ந்து பலவற்றின் மூலமும் நசுக்கப்பட்டு பரிதவித்துக் கொண்டிருக்கும் நமக்கு, நம்மை ஒருவர் முற்றிலுமாய் புரிந்துக்கொண்டுள்ளார் என்ற உணர்வு நம் மனதை ஆசுவாசம் அடையச் செய்யும். நம் ஏக்கங்கள், ஆனந்த கூப்பாடுகள், துயரத்தின் மௌனங்கள், துயரத்தின் கதறல்கள் என அனைத்து உணர்வுகளையும் அச்சு பிசறாமல் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டும் என நாம் எண்ணினால் அது மீப்பெரும் பேராசையே.
அதே சமயம், பெரும்பான்மையான சூழல்களில் ஒருவர் நம்மை புரிந்துக்கொண்டால் போதுமென்பதும், அத்தகைய சூழல்களில் நம் உள்ளுணர்வுகளை ஒருவர் குறைந்த சதவீதமாவது புரிந்துக்கொள்ள வேண்டுமென நாம் எண்ணுவதும் இயல்பாய் மனித மனங்களில் தோன்றக்கூடிய ஆசைதானே!
இப்படியான ஆசைகள் அடியோடு அறுந்த ஓர் சூழ்நிலையில், நம்மை புரிந்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தீயை ஊற்றிய நாளில், நம்மை நாமே அச்சுபிசறாமல் அல்லது முடிந்த வரை எடுத்துரைத்தும்; நம்மை புரியாமல் சென்ற நாட்களின் இறுதியில், இதுதான் நம் வாழ்வு என்று உணர்ந்து தூக்கம் கெட்ட இரவில் ஆறுதலுக்காக, நாம் தனிமையில் இல்லையென்ற போலியுணர்வைப் பெற பாடல் ஒலிக்கச் செய்யும்போது, ஏதேச்சையாய் ஒரு பாடல் ஒலித்து நம் அருகில் இருக்குமல்லவா, அப்படியான ஒரு பாடல்தான், ‘உன்னை நானறிவேன், என்னையன்றி யாறரிவார்?’.
உலகநாயகன் கமல் நடித்த குணா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்தான் ‘உன்னை நானறிவேன், என்னையன்றி யாறரிவார்?’ . இளையராஜா இசைக்க ஆரம்பிக்க, வெறுமனே காதில் மட்டுமல்லாது உள்ளுக்குள் இறங்குமளவுக்கு ‘உன்னை நானறிவேன், என்னையன்றி யாறரிவார்?’ என்ற கவிஞர் வாலியின் வரிகள் ஜானகியின் குரலில் கேட்க, தனிமையில் இல்லையென்ற போலியுணர்வை இப்பாடல் தருமென்று தோன்ற, பாடலின் பக்கம் சற்றே கவனம் சென்றது. வலியின் உக்கிரம் பேயாட்டம் ஆட அருகில் இப்பாடலும் ஒலித்தது.
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யார் அறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்….
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்….
என்றவாறு வாழ்வின் ஏக்கமும் வலியும் ஒருசேர மேற்கண்ட வரியின் வாயிலாய் ஜானகி அவர்களின் குரலில் வழிந்தோட இப்பாடல் ஒலிக்கும். மேலும், இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை நம்மிடம் கடத்தும் ஜானகி அம்மையாரின் குரலில் ஏதோ ஒரு அம்சம் கூடிருப்பதை நாம் உணரலாம். அந்த ஏதோவொன்றுதான் பாடலுக்குள் முதலில் நம்மைக் கொண்டுச்செல்ல உதவுகிறது.
தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை!
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயேன் சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!
மேற்கண்ட வரிகள் கவிதை ரீதியிலே ஆழமான துயரத்தை உணர்த்த, பாடலாக ஒலிக்கும்போது இந்த வரிகள் ஏற்கனவே நம்மிடம் உள்ள உணர்வை இன்னமும் கணமாக்கும் அல்லது இலேசாக்கும்.
நமக்காக ஒருவர் இப்பாடலை பாடுவதாக வைத்துக்கொண்டாலும் சரி, நாம் மற்றொருவருக்காக பாடுவதாக வைத்துக்கொண்டாலும் சரி, பாடலில் துயர ரேகைகள் படிந்தபடியே இருக்கும்.
வரிகளின் வீரியத்தை கடத்த, இசை பக்கபலமாகிறது. குரல் வீரியத்தை பன்மடங்காய் உயர்த்துகிறது. பாடல் நம்மை ஆற்ற மட்டுமே செய்யும் என்று நாம் நினைத்தால் அது தவறான ஒன்றே! பாடல் நம்மை மென்மேலும் உருகவைக்கும், நம்மை நாமிருக்கும் உணர்வின் மிகுதிக்குள் அழைத்துச்செல்லும். அப்படியான அழைத்துச் செல்கையை நிகழ்த்தும் பாடல்களில் ஒன்றுதான் இப்பாடல்!
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யார் அறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்