கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டோரை அடையாளம் கண்டு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு குறித்து, அம்மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பியது.
இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்தது யார்? வன்முறையில் ஈடுபட்டது யார்? பள்ளி வன்முறையின் பின்னணி என்ன? வன்முறையை தூண்டிவிட்டது யார்? வன்முறை தொடர்பாக உளவுத்துறை எடுத்த நடவடிக்கை என்ன? சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக்கொண்டால் நீதிமன்றம் எதற்கு? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என நீதிபதி சதீஷ்குமார் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளதாவது:
பள்ளியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் வெடித்தது அல்ல. திட்டமிட்ட செயல். வன்முறையில் ஈடுபட்டோரை காணொளி காட்சி மூலம் அடையாளம் கண்டு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டோரை தனிப்படை அமைத்து அடையாளம் காண வேண்டும். வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் டிராக்டரை கொண்டு பஸ்சை மோதிய சம்பவமே ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணம். மாணவி இறுதிச்சடங்கு அமைதியாக நடக்க வேண்டும்.
இவ்வாறாக நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
சம்பவத்தின் போது, முன்னாள் மாணர்வகளே வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றும் பேராட்டத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாணவியின் தந்தை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மாணவியின் மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுள்ளது. மாணவியின் தற்கொலைக்கான கடிதம் கிடைத்துள்ளது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என அரசுத்தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி சதீஷ்குமார் வழக்கு விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே மாணவியின் உடலை மறு உடற்கூராய்வுக்கு உட்படுத்த நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வுக்கான பாடங்களின் சுமையால் அரியலூர் மாணவி தற்கொலை