‘திமுகவுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருந்த ஆறு பேர் விடுவிக்கப்படுவதாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, ஆறு பேரும் சனிக்கிழமை விடுதலை ஆகினர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆறு பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
எனக்கு விடுதலையில் உடன்பாடு இல்லை. கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. இதன் பிறகு சமூகத்தில் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்காது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான தமிழர்கள் கைதிகளாக இருக்கிறார்கள். ஏன் அவர்களெல்லாம் விடுதலை செய்யப்படவில்லை? கோயம்புத்தூர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் இன்னும் சந்தேகத்தின் பேரிலேயே சிறையில் இருக்கிறார்கள். ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை? அது என்ன இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி. ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களுக்கு ஒரு நீதியா?
என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘திமுகவுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் முரண்பாடுகள் இருந்தாலும், மதசார்பற்ற கூட்டணி என்கிற அடிப்படையில் நாங்கள் இணைந்துள்ளோம்’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் சொன்ன ஹேப்பி நியூஸ்! பெரும் இழப்பால் கடுப்பில் சீனா