கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சொந்த எஸ்டேட் பகுதியான, கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை, கொள்ளை குற்றங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலைவிபத்தில் பலியானார். இது மேலும், வழக்கு தொடர்பான சந்தேகங்களை அதிகரித்தது.
இந்த வழக்கின் மறு விசாரணை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரன் தலைமையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, ஜெயா தொலைக்காட்சியின் சி.இ.ஓ விவேக், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி மற்றும் அதிமுக பிரமுகர் சஜீவன் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மறு விசாரணை நடத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்த அனுபவ் ரவியும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலை 11 மணி அளவில் கோவை பி.ஆர்.எஸ் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணை இரவு 7 மணி வரை நீடித்துள்ளது. அதாவது சுமார் 8 மணி நேரம் இந்த விசாரணையானது நடந்துள்ளது. இந்த விசாரணையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பெரும்பாலும் மீடியாக்களில் தலைகாட்டாமல் இருந்து வந்தார் இந்த பூங்குன்றன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது அவரின் செல்லப்பிள்ளையாக இருந்த இவர், அதன்பின் கட்சி விவகாரங்களில் பெரிதாக தலையிடுவதில்லை. சமீபத்தில் அதிமுக கட்சி அலுவலகம் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மாறி வருகிறது என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார்.
இதுவரை அமைதி காத்து வந்த பூங்குன்றன் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்துள்ளார். இனி என்னவெல்லாம் வெளிவரப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அஜித்குமாரின் இந்த மென்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? – அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!