இந்தியாவில் உள்ள, இந்திய தொழில்நுட்ப கழகங்களில் முகியமானது சென்னையில் உள்ள தொழில்நுட்ப கழகம் (ஐஐடி சென்னை -IITM). சென்னை ஐஐடி-யில் நிகழும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில், தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் இசைக்கப்படுவது வழக்கம். இனி, கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்தையும் இசைக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி, சென்னை ஐஐடி-யில், 58 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல் போனது, பெரும் சர்ச்சையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, சென்னை ஐஐடி-யின் அப்போதைய இயக்குநர் பாஸ்கர் இராமமூர்த்திக்கு, தமிழகத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடிதம் ஒன்றை எழுதினார்.
அக்கடிதத்தில், சென்னை ஐஐடி அமைப்பதற்கு 1959 ஆம் ஆண்டு, தமிழக அரசு தான் 250 ஏக்கர் நிலப்பரப்பை வழங்கி உதவி செய்தது. மேலும், அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை சென்னை ஐஐடி-க்கு, பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும் தொடர்ச்சியாக தமிழக அரசு செய்து வருகிறது. சென்னை ஐஐடி-யில் கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் அமைக்க, ரூபாய் 10 கோடி நிதியுதவி அளிக்க கோரி, ஐஐடி நிர்வாகம், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், ஐஐடி பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்காமல் இருந்தது, அனைவரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான மத்திய மற்றும் மாநில அரசு விழாக்களில், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது நீண்ட நாள் மரபாக உள்ளது. இனி, ஐஐடி-யில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேண்டுகோளை தற்போது, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்றுள்ளது. அதன்படி, இனி சென்னை ஐஐடி-யில் நடைபெறும் அனைத்து விதமான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும், தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் உள்பட, கூடுதலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் சென்னை ஐஐடி-க்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி, தமிழக அரசு, மாநில கீதமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிரகடனம் செய்தது. அனைத்து விதமான அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழ்நாட்டில், எங்கு அரசு சம்பந்தப்பட்ட விழா நடைபெற்றாலும், அங்கு நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க; அஜித்குமாரின் இந்த மென்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? – அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!