ஐபிஎல் திருவிழாவில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியானது இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இத்தொடரில் ஒரு வெற்றியைக்கூட இன்னும் ருசிக்கவில்லை. அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு வெற்றியையாவது பெற்றிருக்கும் நிலையில் மும்பை அணியானது தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கவே இல்லை.
மும்பை அணியானது வெற்றியை வசப்படுத்த வேண்டிய சமயத்தில் எல்லாம் இறுதி வரையில் சென்று ஏதேனும் சொதப்பி, வெற்றியை விட்டுவிட்டு தோல்வியைத் தழுவிக்கொள்கிறது. மும்பையின் தற்போதைய நிலைமை யாதெனில், பேட்டிங்கில் ஓரளவிற்கு சரி என்ற நிலையையும், பந்துவீச்சில் சுத்தமாக சரியில்லை என்ற நிலையையும் கொண்டதாய் உள்ளது, மும்பை இந்தியன்ஸ்.
பந்துவீச்சில் விக்கெட்டுகள்தான் விழவில்லை என்றால், ரன்களும் கட்டுப்பாட்டில் இல்லை. ஆம்! இறுதி ஓவர்களில் ரன் மழையை எதிரணிக்குத் தந்த வண்ணம் உள்ளனர், மும்பை பவுலர்கள். பும்ரா மட்டும் தொடர்ந்து ஆறுதல் அளித்து வருகிறார்.
மயங்க் அகர்வால் வழிநடத்தும் பஞ்சாப் அணியானது, இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரு போட்டிகளில் வெற்றிப்பெற்றும், இரு போட்டிகளில் தோல்வியடைந்தும் உள்ளது. பஞ்சாப் அணி தோல்வியைடைந்த இருபோட்டிகளுமே பந்துவீச்சில் சொதப்பிய போட்டிகள்தான் எனலாம். மற்றபடி பஞ்சாப் அணியானது நன்-முறையிலேயே உள்ளது.
மேலும், இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில், மும்பை அணி 15 முறையும், பஞ்சாப் அணியானது 13 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இருக்கும் பெரிய கேள்விக்குறியானது என்னவெனில், இன்றாவது மும்பை இந்தியன்ஸ் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பதுதான்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இப்போட்டியானது, இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க உள்ளது.