தொடர் விடுமுறை காரணமாக அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை வருவதால் பொதுமக்கள் பலரும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வர். தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் பெரிய வியாழன் போன்றவை ஏப்ரல் 14 ஆம் தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாள் புனித வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் அதிகம் பயணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை நாட்களுக்கு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டாலும் அது மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதே உண்மை. பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து தான் சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும், அப்படியேதான் ஊர்களிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், பொதுமக்கள் பலரும் அவர்களின் ஊருக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், இன்று மற்றும் நாளை சென்னை, மதுரை, தஞ்சாவூர், கோவை, ஓசூர், ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திண்டுக்கல், சேலம் போன்ற முக்கிய ஊர்களுக்கு 1200 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப ஏற்ற வகையில், வருகின்ற 17 ஆம் தேதி கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் இந்த சேவையை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.