சித்தாமூர் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலையைத் துண்டித்து எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகள் கிருத்திகா. இவருக்கு வயது 12. இவர் அரசு பள்ளி ஒன்றில் 6 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 5 ஆம் தேதி வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், தெரு விளக்கு மாற்றுவதற்காக மின் ஊழியர் கலைச்செல்வன் என்பவர் மின் கம்பத்தின் மீது ஏறினார். அப்போது சேமடைந்திருந்த மின்கம்பம் முறிந்து அங்கு விளையாடி கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்தது.
இதில் படுகாயமடைந்த அந்தச் சிறுமி கிருத்திகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். பின் அந்தச் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ‘அந்த கண்ண பார்த்தாக்கா…’ – விஜய்யின் “வாரிசு” புகைப்படங்கள்!
இந்நிலையில் நேற்று அவ்வழியாக சென்ற கிராம மக்கள், மயானத்தில் கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை பழம், மஞ்சள்தூள், குங்குமம், தலைமுடிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கிருத்திகாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். அப்போது கிருத்திகாவின் தலை துண்டிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு உடலை கைப்பற்றிய காவல்துறையினர் மறு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் மற்றும் கிருத்திகா அவரது வீட்டுக்கு மூத்த மகள் போன்ற காரணங்களால் மாந்திரீக பூஜைக்காக மர்மநபர்கள் சிறுமியின் தலையை துண்டித்து எடுத்து சென்றார்களா? அப்படி செய்தவர்கள் யார்? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்”: அம்மா சோனியா குறித்து மகள் பகிர்ந்த உணர்ச்சிபூர்வமான பதிவு