ரஷ்யாவுக்கு நூற்றுக்கும் மேலான ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை ஈரான் வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 139வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் தங்கிய ட்ரோன்களை ஈரான் வழங்கவுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் இன்று கூறியுள்ளார்.
கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களால் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ள ஜேக் சுல்லிவான், ‘ஈரான் அரசு ஆளில்லா வான்வழி வாகனங்கள் எனப்படும் யூஏவி ட்ரோன்களை ரஷ்யாவுக்கு கூடியவிரைவில் வழங்கவுள்ளது.’
‘எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ரஷ்யா வீரர்கள் இந்த யூஏவிக்களை உபயோகிப்பதற்கு உரிய பயிற்சியை ஈரான் வழங்க உள்ளது. இந்த பயிற்சியின் முதல் கட்டம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படலாம்.’ என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு, ஈரான் யூஏவிக்களை வழங்கியுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜேக், ஈரானின் ட்ரோன்கள் ஹௌதி எனப்படும் கிளர்ச்சியாளர்களால் சவூதி அரேபியாவுக்கு எதிராக, ஏமனில் நடந்த மோதலின் போது உபயோகப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த போரில் ட்ரோன்கள், இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியமான பங்கை வகித்து வருகிறது. தூரத்தில் இருந்து ஏவுகணைகளை விடுவிக்கவும், சிறு குண்டுகளை பொழியவும் ட்ரோன்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
‘உக்ரைனுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம், மேலும், உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம் என்கிற ரஷ்யாவின் எண்ணம் நடக்காது என உக்ரைன் நாட்டினர் கூறுவதற்கு போதுமான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்.’ என்று ஜேக் சுல்லிவான் கூறியுள்ளார்.
உக்ரைனின் கிழக்கு பகுதியைத் தாக்கி வரும் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா தனது வலிமையான ஆயுதங்களைக் கொண்டு டொனேட்ஸ்க் நகரை இனி தாக்கலாம் என உக்ரைன் ராணுவத்தினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், டச்சு பிரதமர் மார்க் ருட்டே உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு இன்று வருகை புரிந்தார். இந்த வருகையின் போது தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளையும், 200 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புள்ள சுமார் 15,000 கோடி) மதிப்புள்ள உதவி உபகரணங்களையும் உக்ரைனுக்கு தருவதாக வாக்களித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மேற்கத்திய நாடுகள் கொடுத்துள்ள தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், இந்த போரின் போக்கை மாற்றிக்கொண்டிருக்கின்றன என்று உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஒலெக்சி டானிலோவ் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 11) கூறியது குறிப்பிடத்தக்கது.