நாட்டில் பரவி வரும் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் எச்.3என்-2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, தொண்டை வலி, உடல் வலி மற்றும் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு நாட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் சளி மற்றும் இருமலுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்ஃப்ளுயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகின்றன.
என்எல்சி-க்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பாமக