ஸ்ரீநகரில் வசிக்கும் பிலால் அகமது என்னும் கல்லூரிப் பேராசிரியர், சூரிய சக்தியினைக் கொண்டு இயங்கும் காரினை உருவாக்கியுள்ளார். கணிதப்பேராசிரியரான பிலால் அகமது குறைந்த செலவில் இயங்கும் வகையில் இந்த காரினை உருவாக்கியுள்ளார்.
‘மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு வாகனத்தினை உருவாக்கவேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்று’ எனக் கூறியிருந்த பிலால், பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக அது முடியாமல் போயுள்ளது என்று கூறியுள்ளார்.
‘சூரிய சக்தியில் இயங்கும் கார்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ஏனெனில் அவை இயற்கையாக கிடைக்கும் சக்தியில் இயங்குகின்றன. அதற்கு அதிக செலவாவதில்லை. மேலும், பெட்ரோலானது வரும் காலங்களில் அதிக விலையுடைய பொருளாய் மாறும் என்று சமீபத்தில் ஒரு செய்தித்தாளில் படித்திருந்தேன்.’ என்று பிலால் கூறியுள்ளார்.
1950களில் வலம் வந்த விலைமதிப்பான கார்களினைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள பிலால் அகமது, அதே வடிவில் தனது காரினையும் உருவாக்கியுள்ளார்.
விலை உயர்வான கார்கள் வசதிப்படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கும் என்கிற கூற்றினை உடைக்க விரும்புவதாக கூறியுள்ள பிலால், தனது சூரிய சக்தியில் இயங்கும் காரானது விலை உயர்ந்த காரின் அனுபவத்தினைக் கொடுப்பது மட்டுமல்லாமல் அனைவராலும் வாங்க முடிகிற விலையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘காஷ்மீரில் பெரும்பாலும் இருண்ட வானிலையே நிலவுகிறது. இதற்காக குறைந்த ஒளியிலும் அதிக அளவு சக்தியினை உருவாக்கும் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக சூரிய மின் தகடுகள் தயாரிக்கும் பல நிறுவனங்களுக்கு செல்ல நேர்ந்தது.’ என்று பிலால் கூறியுள்ளார்.
கார்கள் நிறுத்திவைக்கப்படும் இடங்களில் குறைவான சூரிய வெளிச்சம் படுவதால், காரின் பரப்பினை அதிகரிக்க அதன் கதவுகள் மேற்புறம் நோக்கி திறக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது ஃபெராரி வகைக் கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்புறம் நோக்கித் திறக்கப்படும் கார்களின் கதவுகளை சரியான முறையில் அமைக்க மிகவும் சிரமப்பட்டதாக பிலால் அகமது கூறியுள்ளார். இந்த காரினை ஓட்டிச்சென்றபோது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் பிலால் கூறியுள்ளார். இந்த காரினை வடிவமைக்க 13 வருடங்களை பிலால் செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுக்குழு முடிந்த கையோடு ஓபிஎஸ் ஏன் டெல்லி சென்றார்?