ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தகவல் தொடர்பு நிறுவனங்களில் வேலை பறிப்பு நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. காரணம் என்னவென்று கேட்டால், உலகப் பொருளாதார மந்த நிலை என்று காரணம் கூறுகின்றனர். தமிழகத்தில் இந்த நடவடிக்கைகளை கைவிட மாநில அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், ஐ.டி. துறையானது கடந்த 10 ஆண்டுகளில் 227 பில்லியன் டாலர் வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன், 0.45 சதவீத மில்லியன் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இக்கால கட்டத்தில் பெரும் நிறுவனங்கள் தங்களது லாபத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன.
எதிர்வரும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க வேலைபறிப்பு நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஊழியர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க அவகாசமும் வழங்காமல் தொழிலாளர்கள் தாங்களே ராஜினாமா செய்வது போல் கையெழுத்திட சட்ட விரோதமாக கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இந்தக் காரணங்களால், தமிழக மென்பொறியாளர்கள் இளம் வயதிலேயே வேலையிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தொழிலாளர் நலச் சட்டங்களை ஐ.டி. நிறுவனங்கள் அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வேலையிழப்புகளில் இருந்து மென்பொறியாளர்களை பாதுகாப்பதற்கு ஐ.டி. துறைக் கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வாரிசு திரைப்படத்திலிருந்து வெளிவந்த மூன்றாவது பாடல்…கவருமா அம்மா சென்டிமென்ட்?