உலகளவில் பெரும்பாலோனோருக்கு பாடல் என்பது வெறுமனே ஒரு பாடல் அல்ல. அது உணர்வுகளின் பிரபஞ்சம். எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்த பாடல்கள் உதவுவது போல் நம் பேச்சு வார்த்தைகள் கூட உதவுவதில்லை. நம்மால் நம் உணர்வுகளை சரிவர வெளிப்படுத்த இயலாத இடங்களில் பாடல்கள்தான் நம் சார்பாக பெரும்பாலான இடங்களில் பேசுகின்றன.
இப்படியான பாடல்களை இயற்றுபவர்களை உலகெங்கிலும் கொண்டாடினாலும், இந்தியர்கள் மனதிற்கு நெருக்கமாக வைத்து கொண்டாடி வருகின்றனர். பாடலை பொறுத்தவரையில் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களை தாண்டி மனதில் நிற்பவர் யாரென்றால்? அது பாடகர்கள்தான். இசையோடு வரிகள் இணைந்து உருவாகும் பாடலெனும் கவிதையை நெடுங்காலமாகவே இந்தியர்கள் தங்களின் மனதிற்கு மிக அருகில் வைத்து ரசித்து வருகின்றனர். பாடகர்களை போற்றி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குரல் தென்னிந்தியாவின் மூலை முடுக்குகளில்லொம் ஒலித்து வருகிறது. அந்த குரலை கேட்கும்போதெல்லாம், அந்த குரல் பாடும்போதெல்லாம், ‘ஐயோ..என்னமா பாட்றாங்க..சான்ஸே இல்ல’ என்கிற வார்த்தை எங்கிருந்தோ வந்து விழுந்து விடுகிறது. இப்படியான எண்ண அலைகளை உருவாக்கும் அபரிவிதமான குரலுக்கு சொந்தக்காரர்தான் பி.சுசீலா.
1950-இல் இருந்து வானொலியில் பாடினாலும், 1952-ஆம் ஆண்டு கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கிய ‘பெற்ற தாய்’ என்ற திரைப்படத்தில் ‘எங்கு அழைத்தாய்’ என்ற பாடலின் மூலம் திரையுலக பாடகியாக முதன்முதலில் அறிமுகமானார், சுசீலா. வானொலியில் சுசீலாவின் குரல் ஒரு நிகழ்ச்சியின் வழியே தென்றலாய் தவழ, அந்த தென்றல் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் என்பவரை வருடியது. ஆதலால், தனது திரைப்படத்திலேயே வாய்ப்பை வழங்கி அசத்தினார். இத்திரைப்படத்திற்கு பின்னும் சுசீலாவின் குரல் பெரிதும் அறியப்படாமலேயே இருந்தது. காற்று இந்த உலகில் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், அது தென்றலாக உணரப்படுவதும், புயலாக உணரப்படுவதும் காலத்தின் கையிலேயே உள்ளது.
அப்படியாக, 1955-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவணே கண் கண்ட தெய்வம்’ திரைப்படத்தில் ‘எந்தன் உள்ளம் துள்ளி..’ மற்றும் உன்னைக் கண் தேடுதே என்ற இரு பாடல்களில் சுசீலாவின் குரல் தென்றலும் புயலுமாய் கலந்து கேட்போரிடத்தில் சென்று சேர்ந்தது. அதன் விளைவு பலருக்கும் சுசீலாவிற்கு இனிமையான பெயர் கிடைத்தது. தற்போது இசைக்குயில், மெல்லிசை அரசி என்றெல்லாம் அழைக்கப்படும் சுசீலாவின் ஆரம்ப வெற்றி இப்பாடல்களே.
இதனிடையே சுசீலா பிற மொழிகளில் பாடகராக அறிமுகமானதும் நிகழ்ந்திருந்தது. பிற மொழிகளில் ரசிகர்கள் கிட்டினாலும், தமிழ் ரசிகர்கள் சுசீலாவை உறவாடத்தொடங்கினர் என்றே சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகின் மிக முக்கிய இசை ஜாம்பவான்களாக பார்க்கப்படும், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையில் உருவான பாடல்களில் பெரும்பாலானவற்றை சுசீலா பாடினார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி – சுசீலா என்ற இணை மாபெரும் ரசிக கூட்டத்தை பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த கூட்டணிக்கு பிறகு தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்தார், சுசீலா. மேலும், 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் முதல் தேர்வாக சுசீலா இருந்தார். அப்போது, ஆரம்பித்ததுதான், அதன்பின் பல காலங்கள் சுசீலாவின் ஆட்சி நீடித்தது.
பாலைவனத்திலும் நிகழும் குளிராக சுசீலா அவர்களின் பாடல் உள்ளது. தற்போது பி.சுசீலா பாடுவதில்லை என்றாலும் பல்வேறு மொழிகளில் அவர் பாடிய 25000-க்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்த வண்ணம் உள்ளன.
இந்திய மொழிகளில் பெரும்பாலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மெல்லிசை அரசி பி.சுசீலாவுக்கு இன்று (நவம்பர்-13) பிறந்தநாள்.
தினவாசல் சார்பாக பி.சுசீலா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இதையும் படிங்க: தனது கதர் ஆடை நிறுவனத்தை பிரபலப்படுத்த கமல் நடத்திய போட்டோ ஷூட் – வைரல் புகைப்படங்கள்