வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை வங்கதேச அணியிடம் இழந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப்பெற்றது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 227 ரன்களையும், இந்தியா 314 ரன்களையும் எடுத்திருந்தன. இதன் பின்பு, வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 70.2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல 145 ரன்கள் இலக்காக நிர்ணயமானது.
இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. எளிதான இலக்கை இந்திய அணி எட்டும் என்று எதிர்பார்க்கையில், இந்திய அணியானது தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. சுப்மன் கில், கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி போன்றோர் தனது விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு இழந்தனர். இதனால், மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை எடுத்தது.
இந்நிலையில், ஆட்டத்தின் நான்காவது நாளான நேற்று பெரிதும் எதிர்பார்த்த ரிஷப் பந்த் 9 ரன்களில் மெஹதி ஹாசன் ஓவரில் எல்பிடபில்யூ ஆனார். இதனால், இந்திய அணியானது மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.
இருப்பினும், ரவிசந்திரன் அஸ்வின், ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி நிதானமாக ஆடி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். அஸ்வின் 42 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களும் எடுத்தனர். இவர்களின் ஆட்டத்தின் மூலம், வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றிப் பெற்றுள்ளது. ரவிசந்திரன் அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருதும், புஜாராவுக்கு தொடர்நாயகன் விருதும் அளிக்கப்பட்டது.
மெரினாவில் நடைபெற்ற பேஷன் ஷோ; ஆச்சர்யப்பட்ட மக்கள்!