ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆசியக் கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர் .
இதைத் தொடர்ந்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
இவர்களின் சிறப்பான தொடக்கத்தால், இந்திய அணி முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்கள் குவித்தது. இதையடுத்து, ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தலா 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதன்பின், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். விராட் சீராக விளையாட, சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர், தீபக் ஹூடா களமிறங்கி விராட் கோலிக்கு உறுதுணையாக இருந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். தீபக் ஹூடா 16 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். நன்றாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
மொத்தத்தில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
பாகிஸ்தான் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் நிதானமான தொடக்கத்தைத் தந்தனர். பாபர் ஆசம் 14 ரன்களில் ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய ஃபக்தர் சமாமும் 15 ரன்களில் ஆட்டமிழந்ததார்.
இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் நவாஸ் இணை ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. நவாஸ் 42 ரன்களில் புவனேஸ்வர்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரிஸ்வான் 71 ரன்களில் இருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும், பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 182 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.