இந்தியாவில் முதல் முறையாக நேற்று (வியாழக்கிமழை) கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 3,413 பேருக்கு குரங்கம்மை பாதித்துள்ளது. மேலும் இந்நோய் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவியுள்ளது.
குரங்கம்மை பாதிப்பு பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரிகத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விமானத்தில் வந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர், குரங்கம்மை பாதித்த நபருடன் தொடர்பில் இருந்ததால் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்நோய் பரவாத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
நோய் பாதிப்புக்குள்ளான நபர் அவரது பெற்றோர், விமானத்தில் அவருக்கு அருகில் இருந்தவர்கள், அவரை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் அழைத்து வந்த கார் ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர், விமான ஊழியர்கள் உள்பட 11 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அவர்களுக்கும் தகவல் அளித்துள்ளோம். இந்த குரங்கம்மை பாதிப்பால் யாரும் அஞ்ச தேவையில்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளத்தில் குரங்கம்மை பாதிப்பு உறுதியானதை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, ஒன்றிய சுகாதாரத்துரை அமைச்சகம் உடனடியாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்நிலைக் குழுவை அனுப்பி வைத்துள்ளது.
இக்குழுவில், கேரள சுகாதார மற்றும் குடும்பநல அலுவலக நிபுணர்களுடன் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள், தில்லி ஆர்எம்எல் மருத்துவமனை மருத்துவர்கள், மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த ஒன்றிய குழு கேரள சுகாதாரத்துறையினருடன் இணைந்து கள நிலவரத்தை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளைத் தெரிவிக்கும். நிலவரங்களை மத்திய அரசு கூர்ந்து கண்காணித்து வருகிறது. குரங்கம்மை மேலும் பரவாத வகையில் மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றை போல குரங்கம்மை கட்டுப்படுத்தக் கூடியது தான். பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
உலகை மிரட்டும் குரங்கு அம்மை நோய்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.