இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் நேற்று (ஜூலை 07) இந்தோனேசியாவின் பாலியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய-சீன எல்லைப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் நேற்று இந்தோனேசியாவில் உள்ள பாலியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரு அமைச்சர்களும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய-சீன எல்லையில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, ‘கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியில் நிலவும் ஆசாதாரண சூழ்நிலையை களைத்து, அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.’ என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ‘இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் ஒரு முறை சீன வெளியுறவு அமைச்சருடன் உறுதிப்படுத்திக்கொண்டார். இந்தியா-சீன உறவானது மூன்று பரஸ்பர உறுதிமொழிகளான பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு, பரஸ்பர ஆர்வம் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகிறது என்பதை மீண்டும் ஒரு முறை சீன வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தினார்.’ என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘இந்த நாள் சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் சந்திப்பில் இருந்து தொடங்கியுள்ளது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலைப் பற்றியும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இருநாடுகளின் விமான போக்குவரத்து பற்றியும், மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.’ என பதிவிட்டுள்ளார்.
Began my day in Bali by meeting FM Wang Yi of China. Discussion lasted one hour.
Focused on specific outstanding issues in our bilateral relationship pertaining to the border situation. Also spoke about other matters including students and flights. pic.twitter.com/NYl0Gh451v
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 7, 2022
அடுத்த வருடம் நடைபெறும் ஜி-20 மாநாடு இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு சீன தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் விமர்சனத்துக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டின் பிற நிகழ்ச்சிகள் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. தற்போது வேறு எது குறித்தும் சிந்திக்க தேவையில்லை எனக் கூறியுள்ளது.
முதல் முறையாக ஜி-20 மாநாடு இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நல குறைவு ; மருத்துவமனையில் அனுமதி!