சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வம் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இரு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இரு பாகங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளிவந்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னோட்டம், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே இணையதளங்களில் கசிந்தது.
இத்திரைப்படத்தில் நடித்துள்ள விக்ரமுக்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது விக்ரம் நலமாக உள்ளதாக அவரது மகன் துருவ் விக்ரம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.