தலைநகர் தில்லியிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் முதன்முறையாக ஜூலை 14-ம் தேதி கேரளாவில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலும் இருவருக்கு கேரளாவில் குரங்கம்மை நோய் தொற்று உறுதியான நிலையில், தலைநகர் தில்லியில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய் உறுதியான இவர், மேற்கு தில்லியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 34 . இவர் வெளிநாடுகள் எங்கும் சென்று வாராத நிலையில் குரங்கம்மை தொற்று உறுதியாகியுள்ளது. இருப்பினும், இவர் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள அந்த நபர் குரங்கம்மைக்கான அறிகுறிகள் தென்பட்ட உடனே, தில்லி மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு, இவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு கடந்த சனிக்கிழமை (ஜூலை 23) ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவரின் மாதிரிகளை பரிசோதனைச் செய்து பார்த்ததில் குரங்கம்மை நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், இந்தியாவில் குரங்கம்மை தொற்று எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இரு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு