தமிழகத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஃப்ளு வைரஸ் குழந்தைகளிடையே அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இன்ஃப்ளுயன்ஸா வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், 240 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவத்திற்கு பணம் இன்றி தவிக்கும் பழம்பெரும் பிரபல நடிகை; உதவ முன்வந்த தமிழக அரசு
அவர், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது. முதல்வர், சுகாதாரத்துறை மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தான் உரிய முடிவை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் 1-9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 தேதி வரையிலும், 6-12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே காலாண்டு தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த ஃப்ளு வைரஸ் காய்ச்சலால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 25 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.