உலக இளையோர் செஸ் போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்திய வீரர் பிரணவ் ஆனந்த் பட்டம் வென்றுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை இன்று பெற்றார். இவருக்கு வயது 15. ருமேனியா நாட்டில் நடைபெற்று வரும் உலக இளையோர் செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற இவர் தற்போது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த சாம்பியன்ஷிப் தொடர் யூ-18, யூ-16 மற்றும் யூ-14 என மூன்று பிரிவுகளில் நடைபெற்றுள்ளது. கடந்த 5-ம் தேதி போட்டி தொடங்கியது. இதில் ஓபன் 16 பிரிவில் பிரணவ் விளையாடி இருந்தார். இந்த தொடரில்தான் அவர் பட்டத்தை வென்றுள்ளார். இறுதிச் சுற்று ஆட்டத்தை அவர் சமனில் முடித்து பட்டத்தை வென்றுள்ளார்.
2494 ரேட்டிங் உடன் முதலிடம் பெற்று அந்த பிரிவில் சாம்பியனாகி உள்ளார். கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்த்தை எட்டிய சில மணி துளிகளுக்குள் சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்று அசத்தியுள்ளார்.
அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது இளம்பரிதி யு-14 உலக சாம்பியன் ஆகியுள்ளார். 11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம்பரிதிக்குப் பிரபல செஸ் வீரர் அனிஷ் கிரி, ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இனி ஓவர் டைமிங் செய்ய முடியாது? தடுக்க வருகிறார் ‘குட்டி எலி’ சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகம்!