பாலிவுட் நடிகர்களும், தென்னிந்திய நடிகர்களும் ஒன்றிணைந்தால் அதிகமான ரசிகர்களுக்கு படம் சென்று சேரும் என பாலிவுட் நடிகர் சல்மான்கான் பேசியுள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்தான், லூசிபர். இத்திரைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார். லூசிபருக்கு கிடைத்த வரவேற்பானது பல மொழிகளிலும் இத்திரைப்படத்தை ரீமேக் செய்யலாம் என்ற உணர்வை தயாரிப்பாளர்களிடத்தில் கொண்டுவந்தது.
அந்த வகையில், மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி லூசிபர் ரீமேக்கான ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்க, மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். இந்த திரைப்படமானது இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், ‘காட்ஃபாதர்’ திரைப்படம் சார்ந்த புரோமஷன் நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசியது. தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சல்மான்கான் அந்நிகழ்ச்சியில் பேசியதாவது:
தென்னிந்திய படங்கள் இங்கே நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால் எங்கள் படங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதற்கு தென் மாநிலங்களை சேர்ந்த பெரும் நட்சத்திரம் தேவை. மக்கள் ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் நான் தென்மாநிலங்களுக்குத்தான் செல்ல விரும்புகிறேன்.
பாலிவுட் நடிகர்களும், தென்னிந்திய நடிகர்களும் ஒன்றிணைந்தால் அதிகமான ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். இதன் மூலம் எளிதாக 3,000த்திலிருந்து 4,000 கோடி ரூபாய் வரைக்கும் வசூலாகும். ஆனால், நாம் ரூ.300 – 400 கோடி ரூபாய் வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்
இவ்வாறாக சல்மான்கான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட் வழங்கிய ஊழியர்கள்; 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்