முடிவெட்ட சென்ற பெண்ணுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதிராபாத்தைச் சேர்ந்தவர் சீமா என்ற பெண். இவருக்கு வயது 40. சீமா தனது சகோதரியின் திருமணத்துக்காக சலூன் கடைக்கு முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது, முதலில் இவரின் தலை முடியை ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி அலசி எடுத்துள்ளனர். இந்த முறை 15 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. பிறகு தலை முடியை சுத்தம் செய்ததும் சீமா எழுந்து அமர்ந்துள்ளார்.
அப்போது சீமாவுக்கு திடீரென தலை சுற்றியுள்ளது. பிறகு கீழே விழுந்த சீமாவுக்கு, வாய் கோண, அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த மருத்துவமனையில் சீமாவை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் என்ற மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சீமா அந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், சீமாவுக்கு பக்கவாதம் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சாதரணமாக முடியை அலசிய பெண்ணுக்கு எப்படி பக்கவாதம் வரும் என்ற கேள்வி எழலாம். அதற்கு மருத்துவர்கள், சலூன் கடைக்கும் அழகு சாதன நிலையத்துக்கும் செல்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது புதிதல்ல என்றும், இதற்கு பெயர் ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’ என்று பெயர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற இடங்களில் கழுத்தை அதிக நேரம் பின்னோக்கி வைத்திருப்பதாலும், கழுத்தில் சொடக்கு எடுப்பது போன்றவற்றை செய்வதாலும் மூளைக்கு செல்லும் நரப்புகளில் காயம் ஏற்படும். இதன் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். இதற்கு பெயர் தான் ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’ என்கின்றனர் மருத்துவர்கள்.
இதையும் படிங்க: நோ ஃப்ரிட்ஜ் ? நோ கெமிக்கல் ? 3 மாதம் கெட்டுப்போகாத ‘ஆவின் டிலைட்’ பால் அறிமுகம்