திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் மீது ஏற்றப்படும்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, திருவண்ணாமலை உச்சியில் ஏறுவதற்கு 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் மலை ஏறுவதற்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான டிசம்பர் 06 அன்று காலை 06.00 மணிக்கு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி வழங்கப்படும்.
- டிசம்பர் 06 ம் தேதி காலை 06.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம், செங்கம் சாலை, கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.
- இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக (Queue System) அனுமதி சீட்டு மேற்குறிப்பிட்ட சிறப்பு மையத்தில் வழங்கப்படும்.
- மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
- பக்தர்கள் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- டிசம்பர் 06 அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.
- மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
- மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீபத் திருவிழாவை காண 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதே சமயம், பயணிகளின் வசதிக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக டிச.5 முதல் சென்னை-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்