கர்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
கர்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க : இணையத்தில் பரவிய உல்லாச புகைப்படம்: உயர் அதிகாரிகளுக்கு பரந்த புகார் மனுவால் பரபரப்பு..
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சில மாணவிகள் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்கள் மீதான வாதப் பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வெளியிட்டனர்.
நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாபுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், சுதான்ஷு தூலியா அந்தத் தடை செல்லாது என்று தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், தற்போது இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹேமந்த் குப்தா நாளையுடன் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.