சென்னையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களை திறந்து விட அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிற இந்த நிலையில்,சென்னையில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
அதேபோல் வங்கக்கடலில் நிலவு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரையில், வடசென்னை, பல்லாவரம், பரங்கிமலை, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நள்ளிரவு முதலில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் காலை முதலே அலுவலகங்கள் செல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவை குறைக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, ரெட்டேரி உள்பட சென்னையில் உள்ள குளம், குட்டைகளின் கொள்ளளவை இரண்டு முதல் மூன்று அடி வரை குறைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தொடர் மழை பெய்யும் போது மழைநீர் வடிகால் வழியாக குளத்திற்கு வரக்கூடிய தண்ணீரை எளிமையாக உள்வாங்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 175 குளம் மற்றும் ஏரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்தது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை