அர்ஷ்தீப் சிங் குறித்தும், இந்திய அணி குறித்தும் விமர்சிப்பவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஒரு பகுதியாக சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான போட்டி கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்களைக் குவித்தது. ஆனால் கடைசியில் பாகிஸ்தான் அணி 182 ரன்களைக் குவித்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தன் கைக்கு வந்த கேட்ச்சைத் தவறவிட்டதுதான் காரணம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கடுமையான முறையில் அவரை விமர்சித்துவருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், சமூகவலைதளங்களில் பலர் அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி என்றும் கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
இத்துடன், விக்கிப்பீடியாவில் அர்ஷ்தீப் சிங்கின் நாடு இந்தியா என்பதை அகற்றி காலிஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மீது மதவெறி தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக இந்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரின் விக்கிப்பீடியாவைக் கூட எப்படி இவ்வளவு சுலபமாக எடிட் செய்ய முடியும் என்றும், அர்ஷ்தீப்பின் விக்கிப்பீடியா பக்கத்தில் எப்படி காலிஸ்தான் என மாற்றப்பட்டது என்பது குறித்தும் நேரில் வந்து பதிலளிக்குமாறு இந்தியாவில் உள்ள விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டில், ஹர்பஜன் சிங், அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள். யாருமே வேண்டுமென்றே கேட்சை தவறவிட மாட்டார்கள். நாங்கள் எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதுதான். அதற்கென அர்ஷ்தீப் சிங் குறித்தும், இந்திய அணி குறித்தும் விமர்சிப்பவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் – வெளுத்து வாங்கிய ரிஸ்வான், திணறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..