‘என் அண்ணன் மீதான அன்பு எப்போதும் குறையாது’ என ஜடேஜாவின் தங்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மோடியும் குஜராத் பகுதியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டனர். மறுமுனையில் காங்கிரஸ் கட்சிகளும், ஆம் ஆத்மி கட்சிகளும் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
இன்று நடைபெற்று வரும் தேர்தலில், ஜாம்நகர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. இவருக்காக ஜடேஜாவும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால், ஜடேஜாவின் தங்கை நைனா ஜடேஜா காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஜாம் நகரில் கடந்த 10 நாள்களாக பிரசாரம் செய்த சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சொந்த அண்ணிக்கு எதிராக நைனா ஜடேஜா பிரசாரம் செய்தது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நைனா ஜடேஜா பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது;
இதுபோன்று நடைபெறுவது முதல் முறையல்ல. ஜாம்நகரில் உள்ள பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக பணிபுரிந்துள்ளனர். சித்தாந்தத்தின் மீது 100 சதவிகிதம் திருப்தியுடன் செயல்பட வேண்டும். சிறந்த வேட்பாளர் வெற்றி பெறுவார்.
மேலும், என் அண்ணன் மீதான அன்பு எப்போதும் குறையாது. எனது அண்ணி தற்போது பாஜக வேட்பாளர். அண்ணியாக அவர் சிறந்தவர்
இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.
யூடியூப் தளத்தில் சாதனை செய்த விஜய்யின் ‘ரஞ்சிதமே’…