மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டப் பணிகளுக்காக, சென்னை மெரினாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை 20 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தி வைக்கப்பட உள்ளது.
களங்கரை விளக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இதற்கென காமராஜர் சாலையில் இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக காந்தி சிலை பச்சை நிற துணியால் போர்த்தப்பட்டுள்ளது. தற்போது காந்தி சிலையை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மிகப்பெரிய கிரேன்கள் உதவியுடன், காந்தி சிலை விரைவில் 20 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய பீடத்தின் மீது இடமாற்றம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
சிலையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வை இடவும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் இயலாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியானது, கஸ்டடி படத்தின் டீசர்!