உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கிய, இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரின் முதலில் குரூப் ஆட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நாக்-அவுட் சுற்றுகளும், காலிறுதியும் நடைபெற்றன. இந்நிலையில், தற்போது அரையிறுதிச் சுற்றுகள் முடிவடைந்துள்ளன.
ஏற்கனவே நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் குரோஷியா அணியை வீழ்த்தி, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது. இந்நிலையில், கால்பந்து உலகக் கோப்பையின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, முதன் முறையாக அரையிறுதி வந்த மொராக்கோ அணியுடன் மோதியது.
இந்த ஆட்டம் தொடங்கிய முதலே விறுவிறுப்பான கோணத்தில்தான் நகர்ந்துக்கொண்டிருந்தது. ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியை சேர்ந்த தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோலடித்து தன் அணியை முன்னிலைப் படுத்தினார். முதல் பாதி வரை ஒரு கோல் கூட மொராக்கோ அடிக்கவில்லை.
இதனால், 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதியில், 79-ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த கோலோ முஹனி பிரான்ஸுக்காக கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து போராடிய மொராக்கோ இறுதி வரை ஒரு கோலும் அடிக்காமல், 2-0 என்ற கணக்கில் பிரான்ஸிடம் விழுந்தது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் பிரான்ஸ் விளையாடவுள்ளது.
இந்த ஆண்டின் பிரபலமான இந்திய தொடர்கள் எவை? – வெளிவந்த ரிப்போர்ட்