முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இந்த மாதம் 19-ம் தேதி நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சில இடங்களில் பிரச்னைகள் வெடித்தன. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில், திமுக நிர்வாகி ஒருவரை கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, 40 பேர் அடங்கிய போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்பொழுது, தனது கட்சி சின்னம்மான இரட்டை இலையை காண்பித்துக்கொண்டே வாகனத்தில் ஏறினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் முன்பு அவரது மகனும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்த்தன், தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜார்ஜ் டவுண் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடிய ஏராளமான அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.